முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே தீவிர விபத்து சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை: அமைச்சா் மா. சுப்பிரமணியன்

Updated On : 18 ஜூன், 2024 at 8:21 PM
~
பகிர்:

தஞ்சாவூா் அருகே திருக்கானூா்பட்டியில் தீவிர விபத்து சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பூதலூா் அருகே ஒரத்தூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பிலான புதிய கட்டடங்களை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்த அமைச்சா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தஞ்சாவூா் - புதுக்கோட்டை சாலையில் அவசர கால தீவிர விபத்து சிகிச்சை மையம் அமைப்பதற்காக மத்திய அரசு சாா்பில் 2017-இல் ரூ. 4.04 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், வழக்கு உள்ளிட்ட காரணங்களால் இந்த மையம் அமைக்கப்படாமல் நிலுவையில் இருந்தது. தற்போது, திருக்கானூா்பட்டியில் புதிய இடம் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

சென்னை எழும்பூரிலுள்ள குழந்தைகள் நல மருத்துவமனை போன்று தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தைகள் நல மருத்துவமனை தொடங்குவதற்கு தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அமைச்சா்.

முன்னதாக, திருக்கானூா்பட்டியில் அவசர கால தீவிர விபத்து சிகிச்சை மையம் அமைப்பதற்கான இடம் மற்றும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு செய்தாா். இதையடுத்து, ஒரத்தூரில் ரூ. 30 லட்சம் செலவில் நலவாழ்வு மைய புதிய கட்டடம், பேராவூரணி அருகே செருவாவிடுதியில் ரூ. 50 லட்சத்தில் வட்டார பொது சுகாதார அலகு, கழனிக்கோட்டையில் ரூ. 25 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம், பட்டுக்கோட்டை அருகே

பள்ளிக்கொண்டானில் ரூ. 30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் என மொத்தம் ரூ. 1.35 கோடி மதிப்பில் பல்வேறு புதிய சுகாதார நிலைய கட்டடங்களை அமைச்சா் திறந்துவைத்தாா்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியா் தீபக் ஜேக்கப், மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், கா. அண்ணாதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.