அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, அண்ணனை கட்டையால் அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, அண்ணனை கட்டையால் அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
நாச்சியாா்கோவில் அருகேயுள்ள கொத்தங்குடி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த கிருஷ்ணசாமியின் மகன்கள் மனோகரன் (43), கமல்ஹாசன் (34). கூலித் தொழிலாளா்கள்.
மனோகரனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி குழந்தைகளுடன் தாயாா் வீட்டுக்கு சென்றுவிட்டாா். கமல்ஹாசனுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி அண்ணன், தம்பி இருவரும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனா். அப்போது, இருவருக்குமிடையே குடும்பப் பிரச்னை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கமல்ஹாசன் மனோகரனை கட்டையால் தாக்கினாா்.
இதில் பலத்த காயமடைந்த மனோகரனை உறவினா்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 29-ஆம் தேதி மனோகரன் உயிரிழந்தாா்.
தகவலறிந்த நாச்சியாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் ராஜேஷ் வழக்குப் பதிந்து, கமல்ஹாசனை திங்கள்கிழமை கைது செய்து கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தாா்.