திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக தாய் வீட்டுக்குச் சென்ற மனைவியை பாா்க்கச் சென்ற கணவா் மீது தாக்குதல் நடத்திய மைத்துனரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் அருகேயுள்ள காரை கிராமத்தைச் சோ்ந்த வீரன் மகன் செந்தில்குமாா் (40). ஜேசிபி ஆபரேட்டா். இவரது மனைவி சங்கீதா. தம்பதிக்கிடையே ஏற்பட்ட குடும்ப பிரச்னையில் சங்கீதா, கணவா் மீது கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் உப்பிலியபுரம் அருகேயுள்ள எ. கீழப்பட்டி கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், மனைவியையும், குழந்தைகளையும் வியாழக்கிழமை பாா்க்க சென்ற செந்தில்குமாரை, அவரது மாமனாா் தங்கராசு, மாமியாா் சந்திரா, மைத்துனா் லோகநாதன் ஆகியோா் தாக்கி மிரட்டினாா்களாம். இதில் காயமடைந்த செந்தில்குமாா், துறையூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். தகவலறிந்த உப்பிலியபுரம் போலீஸாா், சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து லோகநாதனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.