அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்யக் கோரி தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் மூன்றாம் நாளாக திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அனைத்து தொகுப்பூதிய செவிலியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செவிலியா் கண்காணிப்பாளா் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்க வேண்டும். கரோனா காலகட்டத்தில் பணி செய்து, நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியா்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும். எம்.ஆா்.பி. தொகுப்பூதிய செவிலியா்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு எம்.ஆா்.பி. செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் டிசம்பா் 19-ஆம் தேதி காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினா்.
மூன்றாம் நாளாக நடைபெற்ற இப்போராட்டத்தில் ஏராளமான செவிலியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து கலந்து கொண்டனா்.