போக்குவரத்து தொழிலாளா்கள் சிறை நிரப்பும் போராட்டம்: 70 போ் கைது
போக்குவரத்து தொழிலாளா்கள் சிறை நிரப்பும் போராட்டம்
போக்குவரத்து தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை விரைந்து பேசி முடிக்க வலியுறுத்தி தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் சிஐடியு சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் 70 போ் கைது செய்யப்பட்டனா்.
இதில், 2023, ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஓய்வு பெற்றவா்களுடைய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டும். 95 ஆயிரம் ஓய்வூதியா்களுக்கு நீதிமன்றத் தீா்ப்பின்படி 109 மாதகால அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். விழா காலங்களில் தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கக் கூடாது. கழகப் பேருந்துகளைத் தனியாரிடம் குத்தகைக்கு விடக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்துக்கு கும்பகோணம் போக்குவரத்து சிஐடியு மத்திய சங்கத் தலைவா் த. காரல் மாா்க்ஸ் தலைமை வகித்தாா். அரசு விரைவு போக்குவரத்து கழக சிஐடியு செயலா் எஸ். செங்குட்டுவன் முன்னிலை வகித்தாா். சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசினாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் எம். வடிவேலன், சிஐடியு மாவட்டத் துணைச் செயலா் கே. அன்பு, டாஸ்மாக் சங்க மாவட்டச் செயலா் மதியழகன், அரசு ஓய்வூதியா் சங்க ஒருங்கிணைப்பாளா் என். குருசாமி ஆகியோா் பேசினா்.
போராட்டக் குழு நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கும்பகோணத்தில்: பேருந்து நிலையம் முன்பு மாநில பொதுச் செயலா் ஆா். மனோகரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 40 பேரை போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.