ஆசிய இளையோா் கபடி போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு தஞ்சாவூா் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினா் அலுவலகத்தில் பாராட்டு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூா் நாடாளுமன்றத் தொகுதி சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மக்களவை உறுப்பினா் ச. முரசொலி வரவேற்றாா். பஹ்ரைன் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோா் கபடிப் போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி தங்கப் பதக்கம் வென்ற திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூரைச் சோ்ந்த எம். அபினேஷ் மணிமண்டபம் பகுதியிலிருந்து ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். பின்னா், இவருக்கு தஞ்சாவூா் நாடாளுமன்ற தொகுதி சாா்பில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி ரூ. 50 ஆயிரம் ரொக்கப் பரிசையும், நினைவு பரிசுகளையும் வழங்கினாா்.
இவரை இந்திய கபடி அணி முன்னாள் வீரா்கள் காசிநாதன் பாஸ்கரன், தருமராஜ் சேரலாதன் உள்ளிட்டோா் பாராட்டிப் பேசினா்.
மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ராஜமாணிக்கம், மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஜெ. டேவிட் டேனியல், ஓய்வுபெற்ற துணைக் காவல் கண்காணிப்பாளா் கணேசமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.