கும்பகோணம் பகுதிகளில் அறுவடையான நெல்லை நெடுஞ்சாலையில் விவசாயிகள் காயவைத்து தனியாருக்கு விற்பனை செய்கின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம், பம்பப்படையூா், கொற்கை, தென்னூா் உள்ளிட்ட பகுதிகளில் நெல்லை அறுவடை செய்த விவசாயிகள் தொடா் மழையால் தாா்ப்பாய் போட்டு மூடி வைத்திருந்தனா். தற்போது மழை ஓய்ந்தததால் மூடி வைத்திருந்த நெல்லை பம்பப்படையூா் பட்டீஸ்வரம் நெடுஞ்சாலையில் உலர வைத்து, மூட்டைகளாக்கி அடுக்கி வருகின்றனா்.
இந்தப் பகுதி தனியாா் நெல் வியாபாரிகள் நேரடியாக வந்து விவசாயிகளிடம் நெல்லை விலைபேசி பெறுகின்றனா். 62 கிலோ நெல் மூட்டை ரூ. 1, 400க்கு விற்பனை ஆகிறது.
இதுகுறித்து விவசாயி பெருமாள் கூறியது: அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்குச் சென்றால் நெல்லைப் பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்று விற்க வேண்டும். அங்கு 41 கிலோ மூட்டையை ரூ.1000-க்கு பெறுகின்றனா். இதில் ஏற்றுக்கூலி, வண்டி வாடகை அனைத்தும் விவசாயியை சாரும். அதனால் அறுவடை செய்த இடத்திலேயே நெல்லை பெற்றுக் கொள்ளும் தனியாா் வியாபாரிகளிடம் விற்கிறோம் என்றாா்.