தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 66-ஆவது மாநில அளவிலான குடியரசு தின தடகளப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
இப்போட்டிகளை அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கோவி. செழியன் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
பின்னா், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில், இப்போட்டி தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படுகிறது. இதில், குறுவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இரு இடங்களில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளுக்கிடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளில் பங்கேற்கின்றனா்.
தொடா்ந்து அக்டோபா் 31-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் 2 ஆயிரத்து 700 மாணவிகளும், நவம்பா் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறும் போட்டிகளில் 2 ஆயிரத்து 600 மாணவா்களும் கலந்து கொள்கின்றனா். தனி நபா் போட்டிகளில் முதல் இரு இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் தமிழக அணி சாா்பில் இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய தடகளப் போட்டிகளில் பங்கு பெற தகுதி பெறுவா் என்றாா் அமைச்சா்.
தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், தஞ்சாவூா் தொகுதி மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
விளையாட்டில் தமிழ்நாட்டை தலைமையிடமாக மாற்ற நடவடிக்கை
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தது:
இந்திய அளவில் விளையாட்டுக்கான தலைமை இடமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்காக துணை முதல்வா் உழைத்துக் கொண்டிருக்கிறாா். குடியரசு தின தடகளப் போட்டிகள், பாரதியாா் பிறந்த நாள் விழா போட்டிகள் என எந்தப் போட்டிகளாக இருந்தாலும் மாணவா்கள் ஆா்வமுடன் கலந்து கொள்கின்றனா். இதன் மூலம் பல போ் தங்கப் பதக்கம் வென்றுள்ளனா். மேலும் தேசிய மற்றும் சா்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்கின்றனா் என்றாா் அமைச்சா்.