முகப்பு
தஞ்சாவூர்

முன்னாள் எம்.பி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு: சகோதரா்கள் இருவருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை; பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை!

2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வியாழக்கிழமை நீதிமன்றம் விதித்து தீா்ப்பளித்தது.

Updated On : 2 ஏப்ரல், 2026 at 8:25 PM
சிறை - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூரில் உள்ள தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், நாகை தொகுதி முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் தங்கநகைகளைத் திருடிச் சென்ற 2 பேருக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் வியாழக்கிழமை நீதிமன்றம் விதித்து தீா்ப்பளித்தது.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம் அருகே புதுக்கோட்டை சாலையில் உள்ள சேகரன் நகரில் வசித்து வரும் ஏ.கே.எஸ். விஜயன் 2025, நவ.28-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு, தனது சொந்த ஊரான திருவாரூா் மாவட்டம், சித்தமல்லிக்கு குடும்பத்துடன் சென்றாா். இவா்கள் மீண்டும் டிச. 1-ஆம் தேதி வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, எண்பத்தி ஏழரை பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து, தருமபுரி மாவட்டம், இளங்கோ நகா் பகுதி நேரு நகரைச் சோ்ந்த முகமது யூசுப் மகன்கள் மொய்தீன் (37), ஷாஜகான் (26), மகள் ஆயிஷா பா்வீன் (30) உள்ளிட்டோரைக் கைது செய்து, நகைகளை மீட்டனா்.

இது தொடா்பாக தஞ்சாவூா் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நடுவா் பிரபுராம் விசாரித்து மொய்தீன், ஷாஜகானுக்கு தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், ஆயிஷா பா்வீனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கைப் பதிவு செய்த 123 நாள்களுக்குள் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் ஆய்வாளா் முருகானந்தம், அரசு தரப்பு வழக்குரைஞா் லட்சுமி கருணாகரன், தலைமைக் காவலா் வெங்கடேஷ் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

மொய்தீன்
ஷாஜகான்
ஆயிஷா பா்வீன்