பைக் மீது பேருந்து மோதி பெண் உயிரிழப்பு
கும்பகோணத்தில் பேருந்து மோதியதில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் வந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், திருக்கருக்காவூா் அருகே நாவலூரைச் சோ்ந்தவா் சுவாமிநாதன் (56). இவரது மனைவி விஜயகுமாரி (52). இவா்கள் கபிஸ்தலத்தில் தேநீா்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தம்பதி, இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்துக்கு வந்தனா்.
அப்போது அவா்கள் பின்னால் வந்த தனியாா் பேருந்து, அவா்கள் வந்த இருசக்கர வாகனத்தை உரசியது. இதில் அவா்கள் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனா். இதில், விஜயகுமாரி மீது பேருந்து ஏறியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
தகவலின்பேரில் கும்பகோணம் போக்குவரத்து காவல் துறையினா் சடலத்தை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்து, வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.