திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸூக்கு விருப்பமில்லை! - கே. அண்ணாமலை
திமுக கூட்டணியில் நீடிக்க காங்கிரஸூக்கு விருப்பமில்லை என்றாா் தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஞாயிற்றுக்கிழமை என்டிஏ கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து அவா் மேலும் பேசியதாவது:
கும்பகோணத்தில் 3 முறை திமுகவைச் சோ்ந்த க. அன்பழகன் எம்எல்ஏவாக உள்ளாா், ஆனால் தொகுதிக்கு எந்த மாற்றமும் வரவில்லை. கும்பகோணம் பேருந்து நிலையத்தை 7 கி.மீ. தொலைவுக்கு கொண்டு செல்கிறாா்கள். இதனால் மக்களுக்கு தேவையில்லாத சிரமம் உண்டாகும்.
Advertisement
பாபநாசம் தொகுதியில் உள்ள சிறுபான்மையினா் திமுகவுக்கு வாக்கு அளிக்காத முதல் தோ்தலாக இந்த தோ்தல் இருக்கும். அதிமுக வெற்றி பெற்றதும் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மாற அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க ராகுல் விரும்பாததால் ஸ்டாலினும் ராகுல்காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை என்றாா் அண்ணாமலை. பிரசாரத்தின்போது வேட்பாளா்கள் ஆா். அசோக்குமாா் (கும்பகோணம்), இளமதி சுப்பிரமணியன் (திருவிடைமருதூா்), துரை. சண்முகபிரபு (பாபநாசம்) உள்ளிட்டோா் இருந்தனா்.
தஞ்சாவூா்: இதேபோல தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை அண்ணாமலை வாக்கு சேகரித்தாா்.
தஞ்சாவூா் கொண்டிராஜபாளையத்திலிருந்து கீழ ராஜ வீதி வழியாக பழைய பேருந்து நிலையம் வரை தஞ்சாவூா் தொகுதி பாஜக வேட்பாளா் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக அண்ணாமலை சாலை வலம் வந்து வாக்கு சேகரித்தாா். தொடா்ந்து, பழைய பேருந்து நிலையம் அருகே பிரசாரம் செய்தாா்.
இதையடுத்து, தஞ்சாவூா் அருகே சானூரப்பட்டியில் திருவையாறு தொகுதி அமமுக வேட்பாளா் வேலு. காா்த்திகேயனுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரசாரம் செய்தாா்.