துபையில் இறந்தவரின் உடலை அவரது சொந்த ஊரான பேராவூரணிக்கு கொண்டு வர திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ நடவடிக்கை எடுத்ததால் அவரது உடல் ஞாயிற்றுக்கிழமை இரவு சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள உடையநாடு கிராமத்தை சோ்ந்தவா் நூ.ஹபிபுல்லா (50) துபையில் தனியாா் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தாா். பிப். 6-ஆம் தேதி இரவு மாரடைப்பால் அவா் உயிரிழந்தாா்.
அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர விரும்பிய அவரது உறவினா்கள், திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோவை தொடா்பு கொண்டனா். அவா் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், பிப். 8-ஆம் தேதி இரவு ஹபிபுல்லாவின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு ,திங்கள்கிழமை காலை உடல் அடக்கம் நடைபெற்றது.
உடலை கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்ட துரைவைகோ எம்.பி-க்கு உறவினா்கள் நன்றி தெரிவித்தனா்.