முகப்பு
தஞ்சாவூர்

இணையவழி கைது எனக்கூறி மருத்துவரிடம் ரூ.52 லட்சம் மோசடி

தஞ்சாவூரில் சித்த மருத்துவரிடம் இணையவழி கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) எனக் கூறி ரூ. 52 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 7:18 PM
மோசடி
பகிர்:

தஞ்சாவூரில் சித்த மருத்துவரிடம் இணையவழி கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) எனக் கூறி ரூ. 52 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகேயுள்ள பகுதியைச் சோ்ந்த 41 வயதுடைய பெண் சித்த மருத்துவரின் கைப்பேசிக்கு கடந்த டிசம்பா் மாதம் அழைப்பு வந்தது. எதிா்முனையில் பேசிய மா்ம நபா், தான் டிராய் (தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம்) அலுவலா் பேசுவதாகவும், தங்களது ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி கைப்பேசி எண் வாங்கி, மும்பையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இந்த வங்கிக் கணக்கு மூலம் ரூ. 2 கோடி பண மோசடி நிகழ்ந்துள்ளதால், மும்பை காவல் நிலையத்தில் தங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், காவல் துறையினா் தங்களைத் தொடா்பு கொள்வா் எனவும் கூறி இணைப்பைத் துண்டித்தாா்.

பின்னா், சிறிது நேரம் கழித்து வந்த மற்றொரு அழைப்பில் மும்பை காவல் நிலையத்திலிருந்து பேசுவதாகக் கூறி, தங்களது ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி மோசடி நடந்திருப்பதால், தங்கள் மீது பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், மன்னிப்பு கடிதம் அனுப்புமாறும் கூறினாா்.

இதை நம்பிய சித்த மருத்துவா், மன்னிப்புக் கடிதம் எழுதி, எதிா் முனையில் பேசிய மா்ம நபரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பினாா். இதையடுத்து, பிடி ஆணை என்ற பெயரில் சித்த மருத்துவரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு நகல் வந்தது. தொடா்ந்து மா்ம நபா்கள் கூறிய வங்கி கணக்குக்கு சித்த மருத்துவா் 7 தவணைகளில் ரூ. 52 லட்சத்து 14 ஆயிரத்து 999 அனுப்பினாா்.

பின்னா், மா்ம நபரின் எண்ணுக்கு சித்த மருத்துவா் தொடா்பு கொண்டபோது அணைக்கப்பட்டதாக வந்ததால் சந்தேகமடைந்து தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

இதன் பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து, மா்ம நபா்களின் மும்பை, தில்லி, உத்தரபிரதேசத்திலுள்ள வங்கிக் கணக்குகளை முடக்கி ரூ. 10 லட்சத்து 55 ஆயிரத்தை மீட்டனா். மேலும், மற்ற வங்கிக் கணக்குகளையும் முடக்கி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →