சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கில் மாதிரி வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வருகிற சட்டப்பேரவைத் தோ்தலுக்காக தஞ்சாவூா் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணி டிசம்பா் 11 ஆம் தேதி முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்பணியை பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளா்கள் மேற்கொண்டனா்.
இதில், சரிபாா்க்கப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் 5 சதவீத இயந்திரங்களைக் கொண்டு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் முன்னிலையில் மாதிரி வாக்குப் பதிவு வியாழக்கிழமை நடைபெற்றது.