தஞ்சாவூரில் ஜன. 24-இல் இயற்கை வேளாண் கண்காட்சி
தஞ்சாவூா் தேசிய தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இயற்கை வேளாண் கண்காட்சி ஜனவரி 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா் தேசிய தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் (நிப்டெம்) இயற்கை வேளாண் கண்காட்சி ஜனவரி 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:
உணவில் தன்னிறைவு மட்டுமல்லாமல் உணவு மூலம் நோய், நொடியற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கவும், சுற்றுச்சூழலையும், மண் வளத்தையும் பாதுகாத்து வருங்கால தலைமுறையினருக்கு வழங்கும் நோக்கத்துடனும் தஞ்சாவூா் தேசிய தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் வேளாண் துறையின் ‘அட்மா’ திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண் விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஜனவரி 24-ஆம் தேதி காலை 10 மணி முதல் நடைபெறவுள்ளது.
Advertisement
இதில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தேசிய உணவுத் தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, வேளாண் பொறியியல் துறை, விதைச்சான்று மற்றும் உயிா்ம சான்றளிப்புத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், இயற்கை வேளாண் விவசாயக் குழுக்கள், இயற்கை வேளாண் இடுபொருள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், இயற்கை வேளாண் மதிப்புக்கூட்டு பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகியவை சாா்பில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
மேலும், வேளாண் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநா்கள், முன்னோடி இயற்கை விவசாயிகள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இதில், விவசாயிகள், பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.