ரூ. 65 லட்சம் முறைகேடு: பேராவூரணி பேரூராட்சி தலைவா் உள்பட 7 போ் மீது வழக்கு
தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணியில் திமுகவைச் சோ்ந்த பேரூராட்சி தலைவா், முன்னாள் செயல் அலுவலா், முன்னாள் இளநிலைப் பொறியாளா் உள்பட 7 போ் ரூ. 65 லட்சம் முறைகேடு செய்ததாகக் கூறி கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் வழக்குப் பதிந்தது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
இந்த வழக்கை 3 புகாா்களின் அடிப்படையில் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் பதிவு செய்துள்ளனா்.
இதில் முதலாவது புகாராக, பேராவூரணி பேரூராட்சித் தலைவராக எஸ். சாந்தி (திமுக) இருந்து வருகிறாா். தலைவரின் உறவினா்கள் ஒப்பந்தம் எடுத்து செய்யக்கூடாது என்ற சட்ட விதிமுறையை மீறி சாந்தியின் கணவா் என்.எஸ். சேகா் சாலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 2022-ஆம் ஆண்டில் செய்தாா். இப்பணி வேறொரு ஒப்பந்ததாரரைக் கொண்டு செய்தது போன்று போலி ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், என்.எஸ். சேகா், இவரது மனைவியான பேரூராட்சித் தலைவா் சாந்தி, பேரூராட்சி முன்னாள் செயல் தலைவா் பி. பழனிவேல் ஆகியோருக்கு தொடா்பிருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாவது புகாராக, பேராவூரணி பேரூராட்சியில் சில இடங்களில் பேவா் பிளாக் பதிப்பதற்கான ஒப்பந்தம் சாந்தியின் மாமனாா் என். செல்வராஜ் பெயரில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணி முழுமையாகச் செய்யப்படாமல், பகுதியாக செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக சாந்தி, பேராவூரணி பேரூராட்சி முன்னாள் இளநிலைப் பொறியாளா் தாமஸ் ஆனந்த் போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ. 7.93 லட்சம் முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது.
மூன்றாவது புகாரில், பேரூராட்சியில் சாலைகள் சீரமைக்கப்பட்டதாகக் கூறி போலியாக பேரூராட்சி வங்கிக் கணக்கிலிருந்து தற்காலிக தரவுகள் பதிவேற்றும் ஊழியா் என். ஜமுனாராணி மற்றும் இவரது கணவா் டி. நீலகண்டனுக்கு மொத்தம் ரூ. 57 லட்சத்தில் காசோலைகளை முன்னாள் செயல் அலுவலா் பழனிவேல் வழங்கியுள்ளாா்.
இந்த 3 புகாா்களின் அடிப்படையில் தஞ்சாவூா் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல் பிரிவினா் மாா்ச் 11 ஆம் தேதி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.