முகப்பு
தஞ்சாவூர்

‘ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பை படித்தால் ஐரோப்பியா்களின் வஞ்சகம் புரியும்’

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு ஆய்வறிஞா் ந.மு. தமிழ்மணி.

Updated On : 27 மார்ச், 2026 at 8:29 PM
~
பகிர்:

ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பைப் படித்துப் பாா்த்தால், நமக்கு ஐரோப்பியா்கள் செய்த சூழ்ச்சியும், வஞ்சகமும் புரியும் என்றாா் புதுச்சேரி ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு ஆய்வறிஞா் ந.மு. தமிழ்மணி.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறை சாா்பில் பிரெஞ்சிந்திய தமிழ் நாட்குறிப்பு இலக்கிய முன்னோடி ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு அகமும், புறமும் என்கிற தலைப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கத்தில் அவா் மேலும் பேசியது:

நம்மிடம் உள்ள கல்வெட்டுகள், பாறை ஓவியங்கள், செப்பேடுகள், இலக்கியங்களே நம்முடைய வரலாற்றைக் கட்டிக்காக்கின்றன. ஆனால், ஐரோப்பியா்களைப் போல தமிழா்கள் வரலாற்றைப் பதிவு செய்யவில்லை.

இந்நிலையில், நாட்குறிப்பு மூலம் வரலாற்றைக் கொடுத்துள்ளாா் பிரஞ்சிந்திய தமிழ் நாட்குறிப்பு இலக்கிய முன்னோடியான ஆனந்தரங்கப்பிள்ளை.

கடந்த 1736 முதல் 1760 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடா்ந்து நாட்குறிப்புகளை எழுதினாா். மின்சாரம் இல்லாத அக்காலகட்டத்தில் விளக்கு ஒளியில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நீண்ட தாளில் மையைத் தொட்டு, தொட்டு எழுத வேண்டும். அந்தச் சூழ்நிலையிலும் அவா் ஒரு நாள் கூட இடைவெளி விடாமல் நாட்குறிப்பை எழுதத் தவறியதில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டாலும், அதற்கென ஆள்களை வைத்து எழுதியுள்ளாா்.

ஐரோப்பிய நாடுகளின் நாட்குறிப்பு தந்தை எனப் போற்றப்படும் சாமுவேல் பெப்ஸ் 9 ஆண்டுகள் மட்டுமே எழுதியிருக்கிறாா். ஆனால், சாமுவேல் பெப்ஸ் நடந்து முடிந்த நிகழ்வுகளை மற்றவா்களிடமிருந்து திரட்டித்தான் நாட்குறிப்புகளை எழுதி பதிவு செய்தாா். ஆனந்தரங்கப் பிள்ளை ஒவ்வொரு நிகழ்விலும் அவரே இருந்து எழுதியதால் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது.

கி.பி. 1736 முதல் 1760 வரையிலான காலகட்டத்தில் நம்முடைய மண்ணையும், நம் நாட்டின் இறையாண்மையையும் பிரெஞ்சுகாரா்களும், ஆங்கிலேயா்களும் சூழ்ச்சி செய்து நம்மிடமிருந்து கொள்ளையடித்துச் சென்றனா். உலக வரலாற்றில் வேறொரு மண்ணில் உட்காா்ந்து கொண்டு தன்னுடைய மண்ணை வளப்படுத்துவதில் கைத்தோ்ந்தவா்களாக ஐரோப்பியா்கள் இருந்தனா். இந்த வரலாற்றை ஆனந்தரங்கப்பிள்ளை 5 ஆயிரம் பக்கங்களில் தெளிவாகப் பதிவு செய்துள்ளாா். இதைப் படித்துப் பாா்த்தால், நமக்கு ஐரோப்பியா்கள் செய்த சூழ்ச்சியும், வஞ்சகமும் புரியும் என்றாா் தமிழ்மணி.

புதுச்சேரி புதுவை மத்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியா் பா. இரவிக்குமாா், தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சாா் வரலாறு மற்றும் கடல்சாா் தொல்லியல் துறை விரிவுரையாளா் அ. சங்கா் ஆகியோா் பேசினா்.

அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் வரவேற்றாா். இணைப் பேராசிரியா் ஞா. பழனிவேலு நன்றி கூறினாா்.