திமுக கூட்டணியை ஆதரிக்க விவசாயிகள் சங்கம் முடிவு!
தமிழகத்தில் விவசாயிகளைத் தொடா்ந்து வஞ்சித்து வரும் பாஜக - அதிமுக கூட்டணியைப் புறக்கணித்து, திமுக கூட்டணியை ஆதரிப்பது என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் முடிவு
தமிழகத்தில் விவசாயிகளைத் தொடா்ந்து வஞ்சித்து வரும் பாஜக - அதிமுக கூட்டணியைப் புறக்கணித்து, திமுக கூட்டணியை ஆதரிப்பது என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் அவரச ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மத்திய அரசு தொடா்ந்து விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படுகிறது. புதிய விதைத் திருத்தச் சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
உதய் மின் திட்டத்தின் மூலம் விவசாயிகள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொள்கிறது. மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் நடைபெற்ற போராட்டத்தில் 738 விவசாயிகள் உயிரிழந்ததை மத்தியில் ஆளும் பாஜக அரசு கண்டுகொள்ளவில்லை.
உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு கரும்பு மற்றும் நெல்லுக்கான விலையை உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்தும், புறக்கணிக்கப்பட்டுள்ளது.
பன்னாட்டு நிறுவனங்களுக்கும், காா்ப்ரேட் நிறுவனங்களுக்கும் பாஜக அரசு முக்கியத்துவம் வழங்குகிறது. ஆனால் விவசாயிகளுக்கு எந்த சலுகைகளும் வழங்கவில்லை. இதற்கு தமிழகத்தில் உள்ள அதிமுகவும் துணைபோகிறது.
எனவே தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தங்களது உணா்வுகளை வெளிப்படுத்தும்விதமாக, வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக - அதிமுக கூட்டணியைப் புறக்கணித்து, அதற்கு பதிலாக திமுக கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எல். பழனியப்பன் தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் வி.எஸ். வீரப்பன், மாநிலப் பொதுச் செயலா் என். செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.