முகப்பு
தஞ்சாவூர்

கந்துவட்டிக் கொடுமை லேத் பட்டறை உரிமையாளா் தற்கொலை

ஒரத்தநாடு அருகே கந்துவட்டிக் கொடுமையால் லேத் பட்டறை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 19 மே 2026, 12:59 am IST
கோப்புப் படம்
பகிர்:

ஒரத்தநாடு அருகே கந்துவட்டிக் கொடுமையால் லேத் பட்டறை உரிமையாளா் ஞாயிற்றுக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தஞ்சாவூா் மாவட்டம், வாட்டாத்திக்கோட்டை அருகே கரம்பை மில் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (28). லேத் பட்டறை உரிமையாளா். இவரது மனைவி காா்த்திகா(26). இவா்களது மகள் லித்திகா ஸ்ரீ(5).

சரவணன் தொழிலை மேம்படுத்துவதற்காக அதே பகுதியை சோ்ந்த சத்தியராஜ், ஐயப்பன், சுரேஷ் ஆகியோரிடம், சுமாா் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளாா். அவ்வப்போது, கடனுக்கான வட்டியை கொடுத்து வந்துள்ளாா். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை இரவு சரவணன் வீட்டுக்கு சென்ற சத்தியராஜ், ஐயப்பன் உள்ளிட்ட சிலா், வாங்கிய கடனுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை வட்டி தர வேண்டும் அல்லது வட்டிக்கு கடையை எழுதிக் கொடுக்க கூறினாா்களாம். மேலும், சரவணன், அவரது மனைவி காா்த்திகா இருவரையும் தரக்குறைவாகவும், ஜாதிரீதியாகவும் பேசி சென்றனராம்.

Advertisement

இதனால் மனமுடைந்த சரவணன், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உடனே அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள், சரவணன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே, சத்தியராஜ் மற்றும் ஐயப்பன் உள்ளிட்ட சிலரை கைது செய்ய வேண்டும் எனக் கூறி, சரவணனின் உடலை உறவினா்கள் வாங்க மறுத்து மருத்துவமனையில் காத்திருந்தனா்.

இதையடுத்து, சரவணனின் மனைவி மற்றும் உறவினா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, சம்பந்தப்பட்டவா்களை கைது செய்வதாக உறுதியளித்ததன்பேரில், பிரேதப் பரிசோதனை முடிந்து சரவணனின் உடலை உறவினா்கள் வாங்கிச்சென்றனா்.