திருச்சி சுந்தரேசன் தெருவைச் சேர்ந்த பாலகுரு என்பவரின் மனைவி சித்ரா (31). 2 குழந்தைகளுக்கு தாயான இவர் தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு சில நாள்களாக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்ததால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு இவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.திருச்சி பாலக்கரையைச் சேர்ந்த இளங்கோ சண்முகம் மகன் சரவணக்குமார் (34), தொழிலாளி. காய்ச்சல், மூச்சுத்திணறல், கல்லீரல் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த இவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு இவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சில நாள்களாக சிகிச்சையிலிருந்த சரவணகுமார் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
ஏற்கெனவே, 17 பேர் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
220 பேருக்கு சிகிச்சை: திருச்சி அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் ஜனவரி 13 ஆம் தேதி முதல் இதுவரை 220 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது குளித்தலை, கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 7 பேர் பன்றிக்காய்ச்சல் சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி போடவேண்டும்...: திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இறந்த ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த செல்லம்மாள் குடும்பத்தினர் கூறுகையில், டாக்டர் ஒருவரின் உறவினரான திருவெறும்பூரைச் சேர்ந்தவரின் குழந்தை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையிலிருந்தபோது, அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் எங்களைப் போன்றோருக்கு தடுப்பூசி போடப்படவில்லை.
மாத்திரை மட்டுமே வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் எங்களுக்கும் தடுப்பூசி போடவேண்டும் என்றனர்.