திருச்சி சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் விலையுயர்ந்த செல்லிடப்பேசியை பறித்துச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
திருச்சி பொன்மலைப்பட்டி அமுல்நகரைச் சேர்ந்த குணசேகரன் மனைவி சாவித்திரி (54). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் செல்லிடப்பேசியில் பேசியவாறே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் சாவித்திரியிடமிருந்து செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனர். விலை உயர்ந்த செல்லிடப்பேசி பறிபோனதால் அவர் சப்தமிட்டார். ஆனாலும் அவர்கள் தப்பிவிட்டனர். இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் சாவித்திரி அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரின்றனர்.