ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் சங்கக் கூட்டமைப்பினர் திருச்சியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், மாதந்தோறும் முதல் தேதியில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், இரு ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ள பஞ்சப்படி உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அமலாக்க வேண்டும், வாரிசு பணி நியமனத்தை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி கண்டோன்மென்ட் அரசுப் போக்குவரத்துக் கழக புறநகர் கிளை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு க. மருதமுத்து தலைமை வகித்தார். ஓய்வூதியர் சம்மேளனம்- ஏஐடியுசி, தொழிலாளர் முன்னேற்ற ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர் நலச் சங்கப் பேரவையினர் பங்கேற்று கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.