திருச்சி அருகே அரசுப் பேருந்து- மோட்டார் சைக்கிள் மோதல்: 3 பேர் சாவு
திருச்சி முத்தரசநல்லூர் அருகே செவ்வாய்க்கிழமை மதியம் மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்தனர்.
திருச்சி முத்தரசநல்லூர் அருகே செவ்வாய்க்கிழமை மதியம் மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளர்கள் மூவர் உயிரிழந்தனர்.
திருச்சி உறையூர் சோழராஜபுரத்தைச் சேர்ந்த சிபிசக்கரவர்த்தி (48). முத்தரசநல்லூர் மண்ணடித் தெரு குமரன் (42), புதுத்தெரு மூர்த்தி (35). தொழிலாளிகளான இவர்கள் மூவரும், செவ்வாய்க்கிழமை மதியம் தென்னந்தோப்பு வேலைக்காக திருச்சியிலிருந்து முத்தரசநல்லூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
முருங்கப்பேட்டை சுடுகாடு அருகே இவர்கள் சென்ற போது ஈரோட்டிலிருந்து புதுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், சிபிசக்கரவர்த்தியின் தலை துண்டிக்கப்பட்டு நிகழ்விடத்திலேயே அவர் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த குமரன், மூர்த்தி ஆகிய இருவரும் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த அவர்கள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்து குறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரான ஈரோட்டைச் சேர்ந்த கதிர்வேல் ஜீயபுரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீஸார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக திருச்சி- கரூர் சாலையில் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.