வங்கிக்கு வந்த பெண்ணுக்கு "உதவி' செய்து ரூ. 48,000 திருட்டு
வங்கிக்கு வந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி ரூ. 48 ஆயிரம் திருடியவரை போலீஸார் தேடுகின்றனர்.
வங்கிக்கு வந்த பெண்ணுக்கு உதவி செய்வதாக கூறி ரூ. 48 ஆயிரம் திருடியவரை போலீஸார் தேடுகின்றனர்.
திருச்சி பெரிய கடைவீதி சௌராட்டிரா தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி ஜமுனா (50), மன்னார்புரம் கூட்டுறவு வங்கி ஊழியர். இவரது மகன் லோகனாதனுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து அவர்களின் வீட்டின் ஒரு பகுதியை ஒத்திக்கு விட்டு வாங்கிய ரூ. 2 லட்சத்தை வங்கியில் செலுத்த சனிக்கிழமை காலை பெரிய கடைவீதியில் உள்ள வங்கியொன்றுக்கு மகனுடன் சென்றார் ஜமுனா.
லோகநாதன் வங்கிக் கணக்குத் தொடங்கும் விண்ணப்பத்தை நிரப்பிக் கொண்டிருந்தபோது, ஜமுனா ரூ. 2 லட்சத்தை வங்கியில் செலுத்தியுள்ளார்.
அதை வாங்கிய காசாளர், பணத்தை அடுக்கித் தருமாறு திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அவர் ஜமுனா வாங்கி அடுக்கிக் கொண்டிருந்தபோது அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் தான் பணத்தை அடுக்கித் தருவதாக வாங்கி அடுக்கி கொடுத்தார். அந்தப் பணத்தை காசாளரிடம் கொடுத்தபோது ரூ. 48 ஆயிரம் குறைந்துள்ளது தெரியவந்தது. பணத்தை அடுக்கிக் கொடுத்த நபர் மாயமாகி விட்டார்.
புகாரின் பேரில் கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
பொறுப்பற்ற காசாளர் :
வங்கி காசாளரின் பொறுப்பற்ற தனத்தால் வாடிக்கையாளரின் பணம் பறிபோனது. காசாளருக்கு உதவியாக இயந்திரங்களும் வந்துவிட்டன. என்றாலும் ரூ. 2 லட்சத்தை கூட அடுக்க இயலாத அந்த காசாளரின் பொறுப்பற்ற செயல் கண்டிக்கத்தக்கது.
அந்த பணத்தை அவர் அடுக்கி எண்ணியிருந்தால் (அது அவரது பணியும் கூட) இந்தச் சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை.
இதுபோன்ற பொறுப்பற்ற பணியாளர்களை பணியிடை நீக்க வேண்டும், அல்லது பறிபோன தொகையை அவரது கணக்கில் பிடித்தம் செய்ய வேண்டும் என வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.