முகப்பு
திருச்சி

மனித உரிமைகள் ஆணைய அதிகாரி 2ஆவது நாளாக விசாரணை

வாகன சோதனையில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருச்சியில், மனித உரிமைகள் ஆணைய அதிகாரி 2 ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டார். 

Updated On : 29 மார்ச், 2018 at 7:08 AM
பகிர்:

வாகன சோதனையில் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக திருச்சியில், மனித உரிமைகள் ஆணைய அதிகாரி 2 ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டார். 
திருச்சியில்  மார்ச் 7-ஆம் தேதி வாகன சோதனையின்போது, கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தஞ்சை பாபநாசம் பகுதியைச் சேர்ந்த உஷா என்ற பெண் உயிரிழந்தார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் என்பவர் எட்டி உதைத்ததன் பேரில் அவர் விழுந்து விபத்துக்குள்ளாகி இறந்ததாக புகார் கூறப்பட்டது.  இது குறித்து மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து, தமிழக மனித உரிமைகள் ஆணையம் தாமாகவே விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தது.
இது குறித்து விசாரணை மேற்கொள்ள விசாரணை அதிகாரியாக பாலகிருஷ்ணபிரபு (துணைக்காவல் கண்காணிப்பாளர்) மார்ச் 27-ஆம் தேதி திருச்சி வந்தார். முதல் கட்டமாக போக்குவரத்து போலீஸார் மற்றும் வழக்கு விசாரணை மேற்கொள்ளும் காவல் நிலைய போலீஸாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் துணைக் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 7 பேர் ஆஜராயினர். தொடர்ந்து 2 ஆவது நாளாக புதன்கிழமையும் விசாரணை நடைபெற்றது. 
இதில், சம்பவத்தில் உயிரிழந்த உஷாவின் கணவர் ராஜா ஆஜராகி வாக்கு மூலம் அளித்தார். தனது கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாகவும் எழுதிக் கொடுத்துள்ளார். 
அது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், போலீஸார், ஆய்வாளர் காமராஜை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். மேலும், உஷா கர்ப்பிணி இல்லை என பரிசோதனை அறிக்கையில் இருப்பதாக போலீஸார் கூறியிருப்பது தவறு, தேவைப்படும் நிலையில் மறு பரிசோதனை செய்யவும் கோரிக்கை விடுப்போம். அத்துடன் நான் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்ததாக அபாண்டமாக கூறுகின்றனர். 
அப்படியெனில் ஏன் அன்றைய தினமே சோதனை மேற்கொள்ளவில்லை? எனக் கூறியுள்ளார். இது தவிர மேலும் மருத்துவர்கள் சிலரிடமும் விசாரணை நடைபெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.