தேசிய அளவிலான அவசர சிகிச்சை சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சியில் தேசிய அளவிலான அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை குறித்த சிறப்பு மருத்துவக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சியில் தேசிய அளவிலான அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை குறித்த சிறப்பு மருத்துவக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ் தொடங்கி வைத்தார். திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனை துணை மருத்துவ இயக்குனர் ந.செந்தில்குமார் வரவேற்றார்.
மூளை நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் ராமகிருஷ்ணன் பேசுகையில், மருத்துவ அறுவைச் சிகிச்சை துறையில் அவசர மற்றும் தீவிர சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், தேவைப்படுவோருக்கு தடையின்றி பெறச் செய்வது குறித்து பேசினார். அப்போலோ குழுமத்தின் முதன்மை இயக்க அலுவலர் ரோகினி ஸ்ரீதர் பேசுகையில், இந்தியாவில் அவரசர சிகிச்சை போதிய அளவில் மக்களுக்கு கிடைக்காமல் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். அவசர சிகிச்சைத் துறையானது மருத்துவமனையின் முக்கிய அங்கமாகும். இதில் தரமான மருத்துவ சேவை வழங்கப்படுமாயின் நோயாளிகள் உயிரிழப்பு, நீண்டநாள் சிகிச்சையைத் தடுக்க முடியும் என்றார்.
திருச்சி அப்போலோ மருத்துவமனையின் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர் வேல்அரவிந்த், ஈரல் இயல், உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணர் குமரகுருபரன், சென்னை மியாட் மருத்துமனை ரத்த மாற்று சிகிச்சை நிபுணர் ஜோஷ்வா டேனியல், சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் எபினேசர் ஆகியோர் அவசர மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ள முன்னேற்றங்கள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினர். தொடர்ந்து, மருத்துவர்களுடனான கலந்துரையாடல் நடைபெற்றன.