திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை இரவு திடீர் வேலை நிறுத்தம் மேற்கொண்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சரக்கு ரயில் என்ஜின் ஓட்டுநர்களுக்கான ஓய்வு வாரத்துக்கு 30 மணி நேரமாக இருந்தது 22 மணி நேரமாகக் குறைக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தகவல் பரவியது . மேலும் ரயில் என்ஜின் ஓட்டுநர்களை அழைத்துச் செல்ல இருந்த வேன் வசதியும் ரத்து செய்யப்பட்டதாம். இதையடுத்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஓடும் தொழிலாளர் சங்கம் சார்பில் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சரக்கு ரயில் ஓட்டுநர்களுக்கு ஆதரவாக பயணிகள் ரயில் என்ஜின் ஓட்டுநர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பயணிகள் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. கன்னியாகுமரியிலிருந்து திருச்சி வந்து இரவு 10.25-க்கு சென்னைக்கு புறப்படவேண்டிய விரைவு ரயில், 11.50-க்கும், 10.30 மணிக்குப் புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில் என்ஜின் 11.20-க்கும் புறப்பட்டுச் சென்றது.