திருச்சியில் வியாழக்கிழமை நிகழ்ந்த இருவேறு சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.
திருச்சி காஜாமலை மின்வாரிய காலனியில் வசித்து வருபவர் அந்தோணி ராஜ் மகன் ராஜூ(50). இவரது மனைவி அஜிதா(45). இவர்கள் இருவரும் கடந்த 21ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். மன்னார்புரம் எல்.ஐ.சி. காலனி அருகே சென்றபோது தடுமாறி கீழே விழுந்தனர். இதில், ராஜூவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி ராஜூ உயிரிழந்தார். புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு விபத்தில் இளைஞர் பலி: திருச்சி கைலாசநாதபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (22). இவரது நண்பர் மதன்(22). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதியதில் மதன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் மதன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.