முடுக்குப்பட்டியில் தேக்கி வைத்திருந்த தோல் தொழிற்சாலை கழிவுநீரை குடித்த 3 மாடுகள் உயிரிழந்தது.
செம்பட்டு பகுதியில் செயல்பட்டு வரும் தோல் பதனிடும் தொழிற்சாலையின் கழிவு நீர் முடுக்கப்பட்டி அருகே காட்டுபகுதியில் திறந்தவெளியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை அகற்ற அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முடுக்கப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரது மாடுகள் மேய்ச்சலுக்கு சென்று இரவு வரை வீடு திரும்பவில்லை. சனிக்கிழமை மாடுகளை தேடிச் சென்ற போது அவருக்கு சொந்தமான 3 மாடுகள் காட்டுப் பகுதியில் வாயில் கழிவுநீர் கலந்து நுரை தள்ளிய நிலையில் இறந்துகிடந்துள்ளன.
இதைகண்ட அப்பகுதி மக்கள் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துவிட்டதாக கூறி சுத்தகரிப்பு நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த தொழிற்சாலை உரிமையாளர்கள் பாதுகாப்புடன் கழிவு நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.