வாழ்க்கையில் முன்னேற ஒழுக்கம் மிக அவசியம் என்றார் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.
திருச்சி ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் தமிழக சட்ட மாணவர்கள் மன்றத்தின் சார்பில் சனிக்கிழமை நடந்த சட்டத் திருவிழாவைத் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:
கெட்ட பழக்க வழக்கங்களை மாணவர்கள் விட்டுவிட வேண்டும். தனியாக இருந்து சாதிப்பதை விட குழுவாக இருந்து சாதிப்பது எளிது. சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சட்டம் சார்ந்த பல நூல்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன.
நல்ல விஷயங்களைக் காது கொடுத்துத் கேட்பதுடன் கடும் உழைப்பும் இருந்தால் வாழ்வில் சாதிக்கலாம். எந்தத் துறையில் இருந்தாலும் அத்துறை சார்ந்த அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
சட்டத் துறையில் வெற்றி பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்து அவர்கள் சமூகத்துக்கு எப்படித் தொண்டாற்றினர் என்பதை தெரிந்து கொண்டு அவர்களைப் போல வர வேண்டும் என்ற உணர்வை சட்டக்கல்லூரி மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை மாணவர்கள் அமைப்பின் பொறுப்பாளர் கே. கெங்காதரன், ஒருங்கிணைப்பாளர் என். காளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாநிலத் தலைவர் வி. தமிழ்நாயகம்,சென்னை உயர் நீதிமன்ற மத்திய அரசு வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆகியோர் பேசினர்.