தேசிய விளையாட்டுப் போட்டி: திருச்சி என்ஐடி சாம்பியன்
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்ஐடி) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய தொழில்நுட்பக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் திருச்சியில் பிப்.20ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், திருச்சி, அருணாசலம், ரூர்கேலா, நாக்பூர், சூரத்கல், கோழிக்கோடு, மிஸோரம், ஜலந்தர், சிக்கிம் ஆகிய பகுதிகளில் உள்ள என்ஐடி மாணவர், மாணவிகள் 1,400 பேர் கலந்து கொண்டனர்.
கைப்பந்து, கூடைப்பந்து, கிரிக்கெட் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. லீக் மற்றும் நாக்அவுட் முறையில் 200 போட்டிகள் நடைபெற்றன.
இதில், கிரிக்கெட் போட்டியில் சூரத் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சி அணி வெற்றி பெற்றது. இதேபோல, பெண்கள் கைப்பந்து இறுதிப் போட்டியில் ஜலந்தர் அணியை 2-0 என்ற புள்ளி கணக்கில் திருச்சி அணி வீழ்த்தியது. கைப்பந்து ஆடவர் போட்டியில் நாக்பூர் அணியை 3-0 என்ற புள்ளி கணக்கில் திருச்சி அணி வீழ்த்தியது. கூடைப்பந்து ஆடவர் போட்டியில் ஜலந்தர் அணியை 38-26 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி திருச்சி அணி வெற்றி பெற்றது.
ஒட்டுமொத்த போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்று திருச்சி என்ஐடி அணி சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
அணி வீரர்களுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் மயில்வாகனன், சனிக்கிழமை இரவு வழங்கி வாழ்த்திப் பேசினார். இதில், கல்லூரி ஆசிரியர்கள், துறைத் தலைவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் என பலர் கலந்து கொண்டனர்.