ஸ்ரீரங்கம் திருவள்ளூவர் வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் விவேகானந்தரின் 157ஆவது பிறந்த தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
விவேகானந்தா சமூக சேவை அமைப்பு, திருச்சி நேரு யுவகேந்திரா சார்பில் நடைபெற்ற விழாவுக்கு எஸ்.என்.நடராஜன் தலைமை வகித்தார். விவேகானந்தா சமூக சேவை அமைப்பின் தலைவர் ஆர்.ஸ்ரீதர் வரவேற்று பேசினார். இதில், தேசிய இளையோர் வார தொடக்க விழாவும், குழந்தைகளுக்கான மாறு வேட போட்டியும் நடைபெற்றது. மாவட்ட மைய நூலக அலுவலர் பி.சிவக்குமார் இன்றைய காலச்சூழலில் குழந்தைகளை எப்படி வளர்க்கவேண்டும். இதில், பெற்றோர்களின் கடமை குறித்து பேசினார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் திருச்சி பதிப்பின் உதவிப் பொதுமேலாளர் ஜே.விஜய், விவேகானந்தரின் அறிவுரைகளை பின்பற்றி இன்றைய இளைஞர்கள் வாழ்வில் வெற்றி பெறலாம் எனவும், பெற்றோர்களின் கடமை குறித்தும் பேசினார். விழாவில், எஸ்.உமாசங்கர், ஆர்.மகேஸ்வரன், எஸ்.இளங்கோவன், பி.கீதா, எஸ்.சுபா ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில், செயலர் டி.சந்தானகிருஷ்ணன் நன்றி கூறினார்.