தங்களின் 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை (ஜன.22) முதல் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி பாரதியார் சாலையிலுள்ள டி.எம்.எஸ்.எஸ்.எஸ்.வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உயர்நிலை நிர்வாகிகள் குழு ஆலோசனைக் கூட்டத்துக்கு, கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் எம். பாலசுப்பிரமணியன், மீனாட்சி சுந்தரம், ஆறுமுகம் தலைமை வகித்தனர். கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் அனைத்து சங்க நிர்வாகிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் அளித்த பேட்டி:
நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தோம். ரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதை கண்டித்து ஜனவரி 22 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் மறியல் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
அனைத்து வட்டங்களில் ஜன.22 காலை 10 மணிக்கு வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம், 23,24 தேதிகளில் சாலை மறியல், 25 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும். ஜன.26 இல் சென்னையில் கூட்டம் நடத்தி அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.