துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் கரட்டாம்பட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்புநீதிபதியுமான கே. சிவக்குமார் பேசியது: தகவல் தொழில்நுட்பம், செல்லிடப்பேசி ஆகியவற்றைக் கையாளுகிறபோது கவனம் பிசகினால் நேர்மறை விளைவுகளுக்குப் பதிலாக வாழ்வில் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படும். பெண்கள் நேரிலும், சமூக வலைதளங்களிலும் யாரேனும் பின்தொடர்ந்தால், ஆபாசம், கேலி பேசினால், ஆசையைத் தூண்டினால் உடனடியாக விழித்துக் கொண்டு உரிய சட்ட உதவியை பெற முயற்சிக்க வேண்டும். திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்களை வாசித்து பொருளுணர்ந்து வாழ்வில் பின்பற்ற வேண்டும். சாலைவிதிகளை அலட்சியப்படுத்தாமல் கண்டிப்பாக பின்பற்றினால் அனைவருக்கும் நன்மை தரும் என்றார். தொடர்ந்து துறையூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் வி. புவியரசு, துறையூர் வழக்குரைஞர் சங்கத் தலைவர் டி. ராமசாமி, செயலர் என். தனசேகரன் உள்ளிட்டோர் பேசினர். முகாமில், வழக்குரைஞர்கள், சட்டத் தன்னார்வலர்கள், மாணவ மாணவிகள் பங்கேற்றனர். வட்ட சட்டப்பணிகள் குழு நிர்வாக உதவியாளர் கலைவாணன் முகாம் ஏற்பாடு செய்தார். கல்லூரி முதல்வர் ஏ. கண்ணன் வரவேற்றார். நிறைவில் வழக்குரைஞர் மனோகரன் நன்றி கூறினார். கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.