திருச்சி அருகே மாயமான கூலித் தொழிலாளி சடலத்தை மீட்டு நவல்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், குண்டூர் பர்மா காலனி மாருதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(53). கூலித் தொழிலாளி. இவர் கடந்த
வெள்ளிக்கிழமை (செப். 6 ) வேலைக்கு செல்வதாக வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. தொடர்ந்து அவரது மனைவி உமாமகேஸ்வரி நவல்பட்டு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நவல்பட்டு போலீஸார் வழக்கு பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள புதிய கட்டளை மேட்டுவாய்க்காலில் அவரது சடலம் மிதப்பதாக நவல்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.