திருச்சி அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வழக்குப்பதிவு செய்யாமல், ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், ஜீயபுரம் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
ஜீயபுரம் அருகிலுள்ள அணலை பகுதியில் கடந்த வாரம் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஜீயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அங்கு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த இசைவாணி, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யாமல் எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரும் அளித்தனர்.
தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில் உதவி ஆய்வாளர் இசைவாணி மீதான புகார் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உதவி ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி மாவட்டக் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.