மருத்துவ சோதனைக்கு பின் சென்னை புறப்பட்டார் துரைமுருகன்
திமுக பொதுச் செயலர் துரைமுருகன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு சென்னை புறப்பட்டு சென்றார்.
திருச்சி: திமுக பொதுச் செயலர் துரைமுருகன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக்கு பிறகு சென்னை புறப்பட்டு சென்றார்.
தமிழக சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழு தலைவராக உள்ள துரைமுருகன், குழு உறுப்பினர்களுடன் திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற வளர்ச்சிப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு நடத்தினார்.
இதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, திருச்சி வழியாக காரில் சென்ற அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, தென்னூர் பட்டாபிராமன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாலையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல்சோர்வு ஏற்பட்டதால் பரிசோதனைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மாலை 6.25 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் ஆலோசனைகளை பெற்று இரவு 7.15 மணிக்கு கார் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார்.