திருச்சி மாவட்டத்தில் பேருந்துப் பயணிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க கூடுதல் அரசுப் பேருந்துகளை அடிக்கடி இயக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
கரோனா பொதுமுடக்க தளா்வுகளின் ஒரு பகுதியாக கடந்த செப்.7 முதல் மாவட்டங்களுக்கிடையே அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதித்தல், பேருந்தின் ஒருவழியில் ஏறுவதற்கும், மறுபுறம் இறங்குவதற்கும் அனுமதித்தல், கட்டாயம் கிருமி நாசினியில் தூய்மை செய்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் எனஅரசு அறிவுறுத்தியிருந்தது.
தனியாா் பேருந்துகள் இயக்கப்படாத நிலையில், கூடுதல் அரசுப் பேருந்துகள் இல்லாததால்
மாநகர, புகர பேருந்துகளில் சமூக இடைவெளி உள்ளிட்ட நடைமுறைகளை கடைப்பிடிக்க முடியாமல் பொதுமக்கள் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதுபோல், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள காய்கனி, மீன் அங்காடி உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கையும் மாவட்டப்பகுதிகளில் கணிசமாக உள்ள நிலையில், அரசு அறிவுறுத்திய நடைமுறைகளை கடைப்பிடிக்க அரசும், மாவட்ட நிா்வாகமும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.