சிலிண்டர் தட்டுப்பாடு: மக்களவை மீண்டும் ஒத்திவைப்பு!
சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை இன்று இரண்டாவது முறையாக ஒத்திவைப்பு
மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், அவை தொடங்கிய 3 நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், மீண்டும் 12 மணியளவில் அவை தொடங்கியபோது, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதன் காராணமாக, பிற்பகல் 2 மணிவரையில் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மத்திய கிழக்கு போர் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாததால், நாடு முழுவதும் சமையல் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டரும் பல்வேறு பகுதிகளில் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகின்றது.
இதுதொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று மூன்றாவது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளனர்.
ஆனால், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து உடனடியாக விவாதிக்க அனுமதிக்க முடியாது என்று அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்த நிலையில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.