முகப்பு
திருச்சி

நீட் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 7,797 பேர் பங்கேற்பு

திருச்சி மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 7,797 மாணவ, மாணவிகள் எழுதினர்

Updated On : 13 செப்டம்பர், 2020 at 4:30 PM
திருச்சியில் நீட் தேர்விற்காக தேர்வு மையம் வெளியே நிற்கும் மாணவ, மாணவிகள்.
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் 22 தேர்வு மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வை 7,797 மாணவ, மாணவிகள் எழுதினர்.

திருச்சி, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வான "நீட்' தேர்வு இன்று நடந்தது. திருச்சி மாவட்டத்தில் "நீட்' தேர்வுக்காக 22 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மாநகரில் 8 மையங்களும், புறநகரில் 14 மையங்களும் அடங்கும்.  சுமார் 9 ஆயிரத்து  499 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காலை முதலே மாணவ-மாணவிகள் தேர்வு மையங்களுக்கு தங்களது பெற்றோருடன் வந்து குவிந்தனர். தேர்வு மையங்கள் முன்பு ஒட்டப்பட்டிருந்த பட்டியலில் தங்களது வரிசை எண் உள்ளதா என்பதை பார்த்து அறிந்து கொண்டனர்.

தேர்வு மையம் முன்பு ஆங்காங்கே அமர்ந்து தேர்வுக்கு புத்தகங்களை வைத்து மாணவ-மாணவிகள் படித்தனர். சிலர் செல்லிடப்பேசி, கையடக்க கணினி மூலம் அதில் இணையதளம் வாயிலாக படித்ததை காணமுடிந்தது. மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் அவர்களது அருகில் அமர்ந்தும், நின்று கொண்டும் இருந்தனர். கரோனா பரவலை தடுக்க தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு சமூக இடைவெளி, கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை போன்ற கட்டுபாடுகள் கடைபிடிக்கப்பட்டது.  மேலும் மாணவ-மாணவிகள் அணிகலன்கள் அணிந்து வரக்கூடாது, மாணவிகள் தலையில் ஹேர்பேண்ட், ஹேர்பின் உள்ளிட்டவை மாட்டக்கூடாது, மாணவர்கள் முழுக்கை சட்டை அணியக்கூடாது, வெளிர் நிறத்திலான ஆடைகள் அணிந்து வர வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதனால் பெரும்பாலான மாணவ-மாணவிகள் விதிமுறைகளை கடைப்பிடித்து தேர்வு எழுத வந்திருந்தனர். இருப்பினும் சங்கிலி, மூக்குத்தி, காதணி, வளையல்கள் அணிந்து வந்த சில மாணவிகள் அதனை தங்களது பெற்றோரிடம் கழற்றி கொடுத்து விட்டனர். மேலும் தலையில் மாட்டியிருந்த பெரிய அளவிலான ஹேர்பேண்ட்டையும் அகற்றினர். பெற்றோர் சிலர் மாணவிகளின் தலையில் மாட்டியிருந்த ரப்பர் பேண்ட்டை கழற்றி தலை முடியை வாரி சிறிய அளவிலான ஹேர்பேண்ட்டை அணிந்து விட்டனர். தேர்வு மையத்தின் நுழைவு வாயிலில் நின்ற ஊழியர்களிடம் மாணவ-மாணவிகள் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவுப்படுத்திக்கொண்டனர். பகல் 11 மணிக்கு மேல் தேர்வு மையத்திற்குள் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். நுழைவு வாயிலில் காவல்துறையினர் மற்றும் மைய ஊழியர்கள் நின்று மாணவ-மாணவிகளை  மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கடும் சோதனை செய்து அனுமதித்தனர்.

தொடர்ந்து ஆடை உள்ளிட்டவைகளை கண்காணித்தும், நுழைவு சீட்டு, அடையாள அட்டை ஆகியவற்றை ஊழியர்கள் சரிபார்த்த பின்னர் மாணவ-மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை கொண்டு வராதவர்கள் ஒரு விண்ணப்ப படிவத்தில் அதற்கான காரணத்தை நிரப்பி கையெழுத்திட்டு கொடுத்தனர். நுழைவு வாயிலை கடந்த பின் மாணவர்கள் மற்றும் மாணவிகள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தப்பட்ட பின் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு பேனா வழங்கப்பட்டன. தேர்வு எழுத மாணவ-மாணவிகள் உள்ளே சென்றதும் அவர்களது பெற்றோர் வெளியில் காத்திருக்கின்றனர்.

திருச்சி காஜாமலை சமது பள்ளி மையத்தின் வளாகத்தில் பெற்றோர்கள் பலர் காத்திருந்தனர். சிலர் அசதியின் காரணமாக சாய்ந்து படுத்து தூங்கினர். திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளும், அவர்களது பெற்றோர்களும் வந்திருந்தனர். காலையிலேயே புறப்பட்டு வந்ததால் மதிய உணவினை பலர் கையில் கொண்டு வந்திருந்தனர். மாணவ-மாணவிகள் தேர்வு எழுத புறப்பட்டு செல்வதற்கு முன்பே சாப்பிட்டு சென்றனர். சிலர் குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டனர். தேர்வு எழுத செல்வதற்கு முன்பு மாணவ-மாணவிகளை அவர்களது பெற்றோர் வாழ்த்தி அனுப்பி வைத்தனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய தேர்வில் மொத்தம் 7 ஆயிரத்து 797 மாணவ-மாணவிகள் எழுதி வருகின்றனர்.1702 பேர் தேர்வு எழுத வரவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.