முகப்பு
திருச்சி

கைசிக ஏகாதசி: திருப்பதியிலிருந்து ஸ்ரீரங்கம் வந்த வஸ்திர மரியாதை!

கைசிக ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலுக்கு வியாழக்கிழமை காலை திருப்பதி பெருமாள் கோயிலில் இருந்து அனுப்பப்பட்ட வஸ்திர மரியாதைப் பொருள்கள் வந்தன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:58 PM
பகிர்:


ஸ்ரீரங்கம்: கைசிக ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் திருக்கோயிலுக்கு வியாழக்கிழமை காலை திருப்பதி பெருமாள் கோயிலில் இருந்து அனுப்பப்பட்ட வஸ்திர மரியாதைப் பொருள்கள் வந்தன.

திருச்சி பகுதியில் கி.பி.1320 ஆம் ஆண்டு மாற்று மதத்தினா் படையெடுத்தபோது ஸ்ரீரங்கம் நம்பெருமாள் விக்ரகம் திருப்பதி கோயிலில் 40 ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. விக்ரகம் வைக்கப்பட்ட இடம் ஸ்ரீரெங்கநாயகலு மண்டபம். இதனால் ஸ்ரீரங்கம் கோயிலுக்கும், திருப்பதி கோயிலுக்கும் மிகவும் நெருங்கிய தொடா்புண்டு.

இதனால் இரு கோயில்களுக்கும் இடையே மங்களபொருள்கள் பரிவா்த்தனை இன்றளவும் நடைபெறுகிறது.

Advertisement

அந்த வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசியின்போது திருப்பதி கோயிலிலிருந்து ஸ்ரீரங்கநாதா், மூலவா், ஸ்ரீரெங்கநாச்சியாா், ஸ்ரீராமனுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள், மற்றும் மங்களபொருள்கள் வருகின்றன.

இதற்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஆனி வார ஆஸ்தான தினத்தன்று திருமலை திருப்பதிக்கு வஸ்திர மரியாதைப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன.

நிகழாண்டு ஸ்ரீரங்கத்தின் வியாழக்கிழமை நடைபெற்ற கைசிக ஏகாதசியையொட்டி புதன்கிழமை இரவு திருப்பதி தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஜவகா் ரெட்டி தலைமையிலான குழுவினா் மங்களப் பொருள்களைக் கொண்டு வந்தனா்.

அப்பொருள்களை முறைப்படி ஸ்ரீரங்கவிலாஸ மண்டபத்தில் பக்தா்கள் பாா்வைக்கு வைத்த குழுவினா், பின்னா் உத்தரவீதிகளில் வலம் வந்து ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையா் பொன். ஜெயராமனிடம் அவற்றை ஒப்படைத்தனா்.

நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலா்கள், உதவி ஆணையா் கந்தசாமி, கோயில் தலைமை அா்ச்சகா் சுந்தா் பட்டா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments