48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!
ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்தில் திறக்காவிட்டால் ஈரான் மீது நரகம் கட்டவிழ்த்து விடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்தில் திறக்காவிட்டால் ஈரான் மீது நரகம் கட்டவிழ்த்து விடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
”அமெரிக்கா - ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளவும், ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கவும் ஈரானுக்கு 10 நாள்கள் அவகாசம் கொடுத்தது நினைவிருக்கிறதா? அதற்கான நேரம் முடிவடையவுள்ளது. அவர்கள் மீது நரகம் கட்டவிழ்த்து விடப்பட 48 மணி நேரமே மீதமுள்ளது. கடவுளுக்கே மகிமை” என்று டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஈரானில் உள்ள அணுமின் நிலையம், பெட்ரோகெமிக்கல் மையம், வர்த்தக முனையம் மற்றும் சிமெண்ட் ஆலை போன்ற முக்கிய இடங்களைக் குறிவைத்து அமெரிக்க-இஸ்ரேல் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்திவரும் நிலையில் டிரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
Advertisement
முன்னதாக, ஈரானில் இன்று காலை புஷேர் அணு மின் நிலையம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் காவலாளி ஒருவர் கொல்லப்பட்டார். அங்கு பணிபுரியும் ரஷிய பணியாளர்கள் 198 பேர் வெளியேறிய சில நிமிடங்களில் இந்தத் தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோகெமிக்கல் மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 பேர் காயமடைந்தனர்.
ஈரான் எல்லையிலுள்ள வர்த்தக முனையத்தின் மீதான தாக்குதலில் ஒருவர் பலியானார். 2 பேர் காயமடைந்தனர்.
மேலும், பந்தர் காமில் பகுதியில் உள்ள தெற்கு துறைமுக சிமெண்ட் ஆலையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போர் தொடங்கியது முதல் இதுவரை 30 பல்கலைக்கழகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
”ஹோர்முஸ் நீரிணையை 48 மணிநேரத்தில் திறக்காவிட்டால் ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்களில் தொடங்கி அந்நாட்டின் மொத்த மின் உற்பத்தி நிலையங்களையும் முற்றிலுமாக அழித்துவிடுவேன்" என்று ஏற்கனவே கடந்த மார்ச் 21 அன்று டிரம்ப் எச்சரித்திருந்தார்.
அதன்பின் மார்ச் 23 அன்று, ஈரான் அதிகாரிகளுடன் மிக நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை 5 நாள்கள் தள்ளி வைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து மீண்டும் அந்த அச்சுறுத்தலை டிரம்ப் தள்ளிவைத்தார். தற்போது மீண்டும் அதேபோல எச்சரிக்கை விடுத்துள்ளார்.