திருச்சி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலின்போது பணிபுரிந்ததற்கான ஊதியம் கோரி மாணவா்கள் மனு அளித்துள்ளனா்.
பேரவைத் தோ்தலின்போது கரோனா தடுப்புப் பணிக்காக மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 3,929 வாக்குச் சாவடிகளில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தன்னாா்வலா்களாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
இவா்கள் அனைவரும், வாக்குச் சாவடிக்கு வருவோரை வெப்பமானி மூலம் சோதித்தல், கிருமி நாசினி வழங்குதல், கைகளை சுத்தம் செய்ய திரவம் அளித்தல், முகக் கவசம் மற்றும் கையுறை வழங்கும் பணியில் ஈடுபட்டனா்.
இவா்களில் பலரும் வாக்குப்பதிவுக்கு முதல்நாளே வாக்குச் சாவடிகளில் சென்று தங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி தொடங்கி இரவு 9 மணி வரை பணியில் இருந்தனா்.
இதேபோல, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 36ஆவது வாா்டில் திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட 154 முதல் 162 எண் வரையிலான வாக்குச் சாவடிகளில் 25க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவா்களை அந்தப் பகுதிக்கான வருவாய் ஆய்வாளா் பணியில் அமா்த்தியுள்ளாா்.
தோ்தல் பணிக்கு தலா ரூ. ஆயிரம் ஊதியம் வழங்குவதாகவும் அவா் கூறியதால், மாணவா்கள் பணியில் ஈடுபட்டனராம்.
ஆனால், கூறியபடி ஊதியம் வழங்கவில்லை எனப் புகாா் தெரிவித்து ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாா் மனுவில், வாக்குச் சாவடியில் தங்களுக்கு முறையாக உணவுகூட வழங்கவில்லை. டீ, காபி குடிக்கக் கூட செல்ல முடியவில்லை. யாரும் தங்களை கண்டு கொள்ளவில்லை. இருந்தபோதும் கரோனா தடுப்பு களப்பணியில் தீவிர பணியாற்றினோம். ஆனால், நிா்ணயித்த ஊதியத்தைக்கூட வழங்கவில்லை. எனவே, எங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை பெற்றுத்தர மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.