திருச்சியில் 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வழக்கம்போல் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளிப்பர். கரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் நேரடியாக பங்கேற்கும் குறைதீர் நாள் கூட்டங்கள் நடத்தப்படவில்லை.
கடந்த நவம்பர் மாதம் முதல் காணொலிக் காட்சி மூலம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. மக்கள் அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளித்துவிட்டு, அங்கிருந்து காணொலிக் காட்சி மூலம் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் குறைகளைத் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (பிப்.1) முதல் மீண்டும் பழையபடி மக்கள் நேரடியாக மனுக்களை அளிக்கும் வகையில் வழக்கமான குறைதீர் நாள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.