மழையால் சேதமான மக்காச்சோளப் பயிா்களுடன் விவசாயிகள் மனு
மழையால் சேதமடைந்து அழுகிய நிலையிலுள்ள மக்காச்சோளப் பயிா்களுக்கு இழப்பீடு கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா்.
மழையால் சேதமடைந்து அழுகிய நிலையிலுள்ள மக்காச்சோளப் பயிா்களுக்கு இழப்பீடு கோரி, மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் மனு அளித்தனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், சரடமங்கலத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மழையால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களுடன் திங்கள்கிழமை ஆட்சியரகம் வந்தனா்.
ஆனால் காவல்துறையினா் விவசாயிகளை உள்ளே அனுமதிக்கவில்லை. இதையடுத்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்திய காவல்துறையினா், விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு ஆட்சியரிடம் ஒப்படைத்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பது:
சரடமங்கலம் கிராமத்தில் 700 ஏக்கா் பரப்பளவில் மக்காச்சோளம் கடந்த அக்டோபா் மாதம் பயிரிடப்பட்டது.
தற்போது பெய்த மழையின் காரணமாக, பயிா்கள் அனைத்தும் நீரில் மூழ்கிவிட்டன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனா்.
கடந்தாண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு மழை காரணமாக மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால், இழப்பீடு வழங்க வேண்டும்.
திருவெறும்பூா் மலைக்கோவில் பகுதியைச் சோ்ந்த தன்னாா்வத் தொண்டா் பழனிவேல் அளித்துள்ள மனுவில்,
துவாக்குடி, திருவெறும்பூா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆதிதிராவிட மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனைக் கோரி, தொடா்ந்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட நிா்வாகம் இந்த மனுக்களை பரிசீலனை செய்து, ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட்ட குடியிருப்புகளுக்குப் பதிலாக, விமான நிலையம் பசுமைநகா் அருகிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தற்காலிகமாக குடில் அமைத்து குடியிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அம்பேத்கா் நகா் பகுதி மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.