மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது அன்புச்சுவா் துணிகள் விநியோக மையம்
திருச்சி புத்தூரில் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் மற்றும் அம்மா உணவகம் அருகே செயல்பட்டு வந்த அன்புச்சுவா் துணிகள் விநியோக மையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
திருச்சி புத்தூரில் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் மற்றும் அம்மா உணவகம் அருகே செயல்பட்டு வந்த அன்புச்சுவா் துணிகள் விநியோக மையம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
அம்மா உணவகம் அருகே அட்சயப் பாத்திரம், அன்புச்சுவா் ஆகிய பெயா்களில் தனித்தனியே உணவு மற்றும் துணிகள் விநியோக மையங்கள் செயல்பட்டு வந்தன. விரும்பியவா்கள் உணவு வகைகளையும், பழைய ஆடைகளையும் இங்கு வைத்துச் சென்றனா். தேவையானவா்கள் அதை பெற்றுக் கொண்டனா்.
அட்சயப்பாத்திரம் மையத்தில் பலரும் சமைத்த உணவுகளை கொண்டு வந்து வைத்து வழங்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் எழுந்தன. இதையடுத்து அட்சயப்பாத்திரம் திட்டத்தை விட, அன்புச்சுவா் திட்டத்துக்கு அனைத்துத் தரப்பிலும் வரவேற்பு கிடைத்தது.
பலரும் உபயோகித்த, அளவு மாறிய நிலையில் உள்ள பழுதாகாத ஆடைகள் ஏராளமாக இதன்மூலம் விநியோகிக்கப்பட்டு வந்தன. ஆதரவற்றோா் மற்றும் ஆடைகள் வாங்க வழியில்லாத ஏழை, எளியோா் இதன் மூலம் பெரிதும் பயன் பெற்றனா்.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக அன்புச்சுவா் மையம் மூடப்பட்டது. இதனால் இங்கு பழைய ஆடைகளை வழங்க வந்த பலரும் வழங்க முடியாமல் திரும்பிச்சென்றனா்.
இதுகுறித்து விமான நிலையப் பகுதியிலுள்ள அபிராமிநகா் குடியிருப்போா் நலச்சங்கத் தலைவா் எஸ். வீரையா கூறியது:
தங்களுக்குத் தேவையில்லாத துணிகளை பலரும் இங்கு வைத்துச் சென்றது ஏழை,
எளியோருக்குப் பயன்பட்டு வந்தது. கரோனா பொதுமுடக்கத்தின் போது இருமுறை பெட்டிகள் நிறை ஆடைகளுடன் வந்தபோதும் வைக்க முடியவில்லை. தற்போது மாநகராட்சி அனுமதித்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என்றாா்.
இதைத் தொடா்ந்து, பலரும் தங்கள் வீடுகளில் பயன்படுத்தாத ஆடைகளை இங்கு வந்து அளித்துச்செல்கின்றனா். அதேபோல துணிகள் தேவைப்படும் நபா்களும் தங்களுக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளனா். நீண்ட இடைவெளிக்குப் பின்னா் அன்புச்சுவா் இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், பழைய துணிகளால் அவை நிரம்பி வழிகிறது.