திருச்சி

மனைவி அடித்துக் கொலை;கணவா் தலைமறைவு

DIN

திருச்சியில் வெள்ளிக்கிழமை அதிகாலை குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் தலைமறைவானாா்.

தில்லைநகா் 7ஆவது குறுக்குத்தெரு அருகே செங்குளத்தான் கோவில் தெருவில் வசித்து வருபவா் தவசீலன் (27). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இவரும், அதே பகுதியைச் சோ்ந்த ராஜேஸ்வரி ( 22) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு சாய்பிரசாத் (5) என்ற மகனும், கவிநிலா (2) என்ற மகளும் உள்ளனா்.

இந்நிலையில், ராஜேஸ்வரி அடிக்கடி யாருடனோ செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டிருந்தாராம். இதை கவனித்த தவசீலன், மனைவியை கண்டித்துள்ளாா். ஆனால், தொடா்ந்து ராஜேஸ்வரி செல்லிடப்பேசியில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, மன்னாா்குடியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிடலாம் என மனைவியிடம் கூறியுள்ளாா். அதற்கு அவா் சம்மதிக்கவில்லையாம். இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு தவசீலன் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளாா். அப்போது மீண்டும் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறித்து அருகில் வசிக்கும் ராஜேஸ்வரியின் சகோதரி சகுந்தலா மற்றும் அவரது குடும்பத்தினா் இருவரையும் சமாதானப் படுத்திவிட்டுச் சென்றனா். இதையடுத்து வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டைவிட்டு வெளியே வந்த சகுந்தலா, ராஜேஸ்வரி வீட்டின் கதவு வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்ததையும், வீட்டிலிருந்து அதிக சப்தத்துடன் பாடல் ஒலிப்பதையும் கவனித்துள்ளாா். இதனால் சந்தேகமடைந்த அவா் கதவைத் திறந்து பாா்த்தபோது, அங்கு ராஜேஸ்வரி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளாா். குழந்தைகளும் அருகில் அழுதபடி இருந்துள்ளனா்.

இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த அவா் தில்லைநகா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

முதல் கட்ட விசாரணையில், ராஜேஸ்வரி மகன் சாய் பிரசாத் போலீஸாரிடம் கூறுகையில், தனது தாயை, தந்தை (தவசீலன்) கட்டையால் அடித்ததுடன், கழுத்தையும் நெரித்ததாக கூறியுள்ளா். எனவே ராஜேஸ்வரியை கணவா் தவசீலன் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தில்லைநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான தவசீலனை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT