பெண் அழைக்க சென்ற போது பரிதாபம்: துறையூர் அருகே சுமையேற்றும் வாகனம் கவிழந்து ஒருவர் உயிரிழப்பு
துறையூர் அருகே சுமையேற்றும் வாகனத்தில் பெண் அழைக்க சென்ற போது வாகனகம் விபத்துக்குள்ளானதால் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.
துறையூர்: துறையூர் அருகே சுமையேற்றும் வாகனத்தில் பெண் அழைக்க சென்ற போது வாகனகம் விபத்துக்குள்ளானதால் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.
துறையூர் அருகேயுள்ள கே. கருப்பம்பட்டி கோபிநாத்தின் மகளுக்கும் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள திருவரங்கப்பட்டி செல்வராஜ் மகன் பாலமுருகன்(21) என்பவருக்கும் ஜூலை 7ஆம் தேதி மணமகனின் ஊரில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை பெண் அழைத்து வர மணமகனின் உறவினர்கள் சுமை ஏற்றும் வாகனத்தில் மணமகள் ஊருக்கு சென்றனர்.
துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விபத்தில் காயமடைந்தவர்கள்.
Advertisement
இவர்களில் ஆண்கள் பயணித்த வாகனம் மெய்யம்பட்டி- சேனப்பநல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத வகையில் வாகனம் சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் திருவரங்கப்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மகன் பெரியண்ணன்(57) விபத்து நிகழ்விடத்தில் உயிரிழந்தார். இவருடைய சடலம் உடற்கூராய்வுக்காக துறையூர் அரசு மருத்துவமனை அனுப்பப்பட்டது.
மேலும் அதே ஊரைச் சேர்ந்த வாகன ஓட்டுனர் கோபி(24) உள்பட காயமடைந்த 11 பேரும் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக துறையூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.