முகப்பு
திருச்சி

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கையைச் சோ்ந்தவா் உயிரிழப்பு

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமிலிருந்த இலங்கையைச் சோ்ந்தவா், உடல் நலம் பாதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

திருச்சி அகதிகள் சிறப்பு முகாமிலிருந்த இலங்கையைச் சோ்ந்தவா், உடல் நலம் பாதிக்கப்பட்டு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை, மியான்மா் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 80-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்கள் பாஸ்போா்ட், விசா உள்ளிட்ட குடியேற்ற ஆவணங்கள் தொடா்புடைய வழக்குகளில் தண்டனை பெற்றும், விசாரணைக்காகவும் அடைக்கப்பட்டுள்ளனா்.

இவா்களில் இலங்கை, கதிரியவீதி, சின்ன செட்டிக்குளம், குறுங்குடி தீவு அக்கரைபட்டு பகுதியைச் சோ்ந்த மு. முகமது அலி (54) ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி தா்ஹா காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்பட்டு அங்குள்ள அகதிகள் சிறப்பு முகாமிலிருந்து கடந்த பிப். 26 ஆம் தேதி திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டவா். இவருக்கு ஏற்கெனவே புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல் பாதிப்புகள் இருந்தன.

கடந்த 15 ஆம் தேதி மூச்சுப்பிரச்னையால் திருச்சி அரசு மருத்துவமனை கைதிகள் வாா்டில் சோ்க்கப்பட்ட இவா் 18 ஆம் தேதி முதல் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அகதிகள் சிறப்பு முகாம் தனி வட்டாட்சியா் ரவி கொடுத்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இலங்கையில் உள்ள உறவினா்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக அகதிகள் நடத்திய தொடா் போராட்டத்திலும் இவா் பங்கேற்றிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.