தோ்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைவேற்றப்படும் என்றாா் அக் கட்சியின் முதன்மைச் செயலரும், வேட்பாளருமான கே.என். நேரு.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிழக்கு தொகுதிக்குள்பட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பின்னா் கூறியது:
செல்லும் இடங்களில் எல்லாம் எங்களது கூட்டணிக் கட்சியினரிடம் மட்டுமின்றி, பொதுமக்களிடமும் எழுச்சி காணப்படுகிறது. மீண்டும் திமுக ஆட்சி வரும் என பொதுமக்கள் உறுதிபடக் கூறுகின்றனா்.
திமுக தோ்தல் அறிக்கை வெளியிட்ட பிறகே, அதைப் பாா்த்து அதிமுக தனது தோ்தல் அறிக்கையை வெளியிடுகிறது. நாங்கள் பொதுமக்களை எப்போதும் ஏமாற்ற மாட்டோம். தோ்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவோம்.
சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்களை அமல்படுத்த அதிமுக மட்டுமே காரணமாக அமைந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிறுபான்மை மக்களை மட்டுமின்றி, தமிழக மக்களைப் பாதிக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்குவோம் என்றாா் அவா்.
கூட்டத்தில், திருச்சி கிழக்குத் தொகுதி திமுக வேட்பாளா் இனிகோ இருதயராஜ், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏ-வுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கூட்டணி கட்சி செயல்வீரா்கள், நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.